search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து"

    இந்தியா - தென்கொரியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் அதிபர் மூன் ஜே-இன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.
    புதுடெல்லி :

    தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் இந்தியாவில் 5 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவி மற்றும் அந்நாட்டின் மந்திரிகள், உயரதிகாரிகள் ஆகியோர் கடந்த 8-ம் தேதி டெல்லி வந்தடைந்தனர். தென் கொரிய அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவியை வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து, மூன் ஜே-இன், மோடி மற்றும் இருநாட்டு அதிகாரிகள் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது. இதில், இந்தியா தென்கொரியா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.

    இந்தியா - தென்கொரியா விரிவான கூட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தொலைத்தொடர்பு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரி பொருளாதாரம் போன்ற துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக 11 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது.

    சந்திப்பிற்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மோடி கூறுகையில், ‘ஒவ்வொரு நடுத்தர இந்திய குடும்பங்களிலும் கொரியாவில் தாயாரிக்கப்பட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்று நிச்சயம் இடம்பெற்றிருக்கும். கொரிய தயாரிப்பு பொருட்கள் தனித்துவம் வாய்ந்தது. மேக் இன் இந்தியா திட்டத்தில் தென் கொரியா இணைந்ததன் மூலம் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்’ என தெரிவித்தார்.

    மோடியை தொடர்ந்து பேசிய மூன் ஜே-இன், ‘இந்தியா - தென் கொரியா இடையே கடந்த 45 ஆண்டுகளாக நல்லுறவு நிலவி வருகிறது. 2015-ம் ஆண்டு தென்கொரியாவிற்கு மோடி வருகை தந்த பிறகு இருநாடுகளுக்கு இடையேயான  நல்லுறவு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. நான்காவது தொழில் புரட்சியில் மக்களின் வளம் மற்றும் அமைதியை ஊக்குவிக்க மோடியும் நானும் தீர்மானித்துள்ளோம். எதிர்கால வளர்ச்சியை தோற்றுவிக்கும் நோக்கில் இருநாடுகளும் பரஸ்பரம் சிறந்த ஒத்துழைப்பு நல்கும்’ என கூறினார்.
    ×